செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சூத்திரனின் பிறப்பு (கவிதை)


வழக்கம் போல்
நகர் உலாச் சென்ற கடவுள்
தெரியாத்தனமாக
ஒரு வேசியின்
வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்

ஏதுமறியாத வேசிக்கு
வந்திருப்பது கடவுளென்று
தெரியாவிட்டாலும்
யாவுமறிந்த கடவுளுக்கு
அவள் வேசியென்பது
தெரிந்துவிட்டது
உள்ளே வாருங்கள் என்றாள் வேசி.
கடவுள் தயங்கினார் –
இல்லை, நான் அதற்காக வரவில்லை.
வேசி சிரித்தாள் -
நேற்றுந்தான் ஒருவன்
கவிஞன் நான்
கவிதை எழுதத்தான் வந்தேன்
என்று சொல்லிக்கொண்டு
காகிதம் பேனாவோடு வந்தான்
காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை
காலையில் தான் போனான் என்றாள்.
கடவுள் திக்கினார் -
நான் அப்.....
அதற்கு மேல்
கடவுளைப் பேசவிடவில்லை வேசி.
ஆட்கொல்லி ஆண்டவன்
ஆட்கொள்வதற்கு
வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.
சூத்திரனின்
பிறப்பை
வேதங்கள் அறிவித்தன,
பிரபஞ்சம் கொண்டாடியது
(seyonyazhvaendhan@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக